தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் அசுத்தமான கழிவறை பற்றிய தகவலுக்கு ரூ.1,000 பரிசு!
“தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுத்தமில்லாத கழிப்பறை பற்றி தகவல் அளித்தால், ரூ.1,000 பரிசு வழங்கப்படும்” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலை துறை தூய்மை பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன பயணிகள், சுங்கச் சாவடிகளில் உள்ள கழிப்பறைகள் சுத்தமில்லாத நிலையில் இருந்தால் அதற்கான தகவலை அளிக்கலாம். இதற்காக, தகவல் அளித்தவர்கள் அவர்களுடைய வாகனத்தின் ‘பாஸ்டேக்’யில் ரூ.1,000 ரீசார்ஜ் பெறுவர். இந்த பரிசு திட்டம் அக்டோபர் 31-ம் தேதி வரை செல்லும் மற்றும் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கழிவறைகளுக்கே பொருந்தும்.
இத்திட்டத்தின் கீழ் ரூ.1,000 பெற, பயணிகள் ‘ராஜ்மார்க்யாத்ரா’ செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். செயலியில் பெயர், சுங்கச்சாவடி கழிவறை இருப்பிடம், வாகன பதிவு எண், மொபைல் எண் போன்ற தகவல்களை வழங்க வேண்டும். அதேசமயம், சுத்தமில்லாத கழிவறை புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். ஆய்வுப் பின் சம்பந்தப்பட்ட வாகனத்தின் ‘பாஸ்டேக்’யில் ரூ.1,000 ரீசார்ஜ் செய்யப்படும்.
ஒரே நாளில் ஒரே முறையே இதைப் பயன்படுத்த முடியும். இந்த பரிசு தொகையை பணமாக மாற்றவோ, வேறொருவருக்கு வழங்கவோ முடியாது. தேசிய நெடுஞ்சாலை துறை கட்டிய அல்லது பராமரிக்கும் கழிவறைகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பொருந்தும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.