பிஎம் கிசான் திட்டத்தில் விதிகளை மீறி பணம் பெற்ற 18 லட்சம் தம்பதிகள் குறித்து ஆய்வு
பிஎம் கிசான் திட்டத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் நிதி பெற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. திட்ட விதிகளின் படி, குடும்பத்தில் ஒரே உறுப்பினர் மட்டுமே இந்த நிதியை பெற தகுதி பெற்றவர். ஆனால், மத்திய வேளாண் அமைச்சக ஆய்வில் இருவரும் ஒரே நேரத்தில் பணம் பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) திட்டத்தில் 31.01 லட்சம் பயனாளிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 17.87 லட்சம் பேர் கணவன்-மனைவி என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தில் குடும்பத்தில் ஒரே நபர் பயனாளியாக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இருப்பினும், கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் நிதி பெற்றுள்ளார்கள், இது விதிமுறைகளை மீறிய செயலாகும்.
இதையடுத்து, மத்திய வேளாண் அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பி, அக்டோபர் 15-ம் தேதிக்குள் பயனாளிகளை சரிபார்க்கும் பணிகளை முடிக்க வலியுறுத்தியுள்ளது.
பிஎம் கிசான் திட்டம் விவசாயிகளின் குடும்ப நிதி தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது. அதன்படி, ஆண்டுக்கு மூன்று தவணைகளில் ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ரூ.2,000 வீதம், மொத்தம் ரூ.6,000, நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வழங்கப்படுகிறது.