உ.பி.-யில் ‘ஆபரேஷன் லங்கடா’: 10 நாட்களில் 20 என்கவுன்ட்டர் — 10 பேர் உயிரிழப்பு
உத்தரப் பிரதேசத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதையடுத்து, யோகி ஆதித்யநாத் அரசு குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் ‘ஆபரேஷன் லங்கடா’ என்ற பெயரில் முக்கிய குற்றவாளிகளை ஒழிக்கும் சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது கடந்த 10 நாட்களில் 20 என்கவுன்ட்டர்கள் நடைபெற்றுள்ளன. இதில் 10 முக்கிய குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில், ரூ.2.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட வினீத் பாட்டி, ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட இப்தகார், இம்ரான், அர்ஷத், நயீம் உள்ளிட்டோர் அடங்குவர்.
கவுசாம்பி மாவட்டத்தில் புதுமணப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 48 மணி நேரத்துக்குள் அவரது காதலன் பால்வீர் காலில் சுட்டு பிடிக்கப்பட்டார். அதேபோல, ராபர்ட்ஸ்கஞ்ச் மாவட்டத்தில் ஒரு பெண்ணிடம் கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் என்கவுன்ட்டரில் கைது செய்யப்பட்டனர்.
அவுரையா மாவட்டத்தில் ரூ.25,000 வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த ராஜ்னேஷ் கைது செய்யப்பட்டார். இவர்மீது பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. பரேலியில், ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட காஸ்கஞ்சின் இப்தகார் கடந்த 8ஆம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிகழ்வுகள் மாநிலம் முழுவதும் குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. என்கவுன்ட்டர் புகைப்படங்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து, சஹாரன்பூர் துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட பிரசாந்த் குமார் தானாகவே காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கடந்த 8 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச காவல்துறை 14,973 என்கவுன்ட்டர்கள் நடத்தியுள்ளது; இதில் 239 குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.