கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோயால் உயிரிழந்தோர் 23 ஆக உயர்வு

கேரள மாநிலத்தில் “மூளையை உண்ணும் அமீபா” எனப்படும் அரிய நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை மாநிலம் முழுவதும் 104 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:

“2023ஆம் ஆண்டு கோழிக்கோடு மாவட்டத்தில் ஒருவருக்கு நிப்பா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை கட்டாயமாக பதிவு செய்யும் உத்தரவு வழங்கப்பட்டது.

2024ஆம் ஆண்டிலிருந்து மூளைக்காய்ச்சல் நோய் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் சிலருக்கு ஏற்பட்ட பாதிப்பு ‘மூளையை உண்ணும் அமீபா’ தொற்றால் ஏற்பட்டது என உறுதி செய்யப்பட்டது,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:

“இத்தொற்று தற்போது அதிகளவில் கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் காணப்படுகிறது. மேலும், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளிலும் நோய்த் தாக்கம் அதிகரித்து வருகிறது.

அமீபா தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்கும் நோக்கில் ‘ஒன் ஹெல்த்’ திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம், உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது கேரளாவில் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைவாக உள்ளது,” என்று அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box