பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை — எதிரொலியாக புதிய கூட்டத்தில் அனுமதி!

டெல்லிக்கு வந்திருந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முட்டகி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் பங்கேற்கத் தடை செய்யப்பட்டதால் கடும் சர்ச்சை எழுந்தது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மற்றொரு கூட்டத்தில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

2021 ஆகஸ்டில் தலிபான் ஆட்சியை மீண்டும் பிடித்ததன் பிறகு, வெளியுறவு அமைச்சராக அமீர்கான் முட்டகி இதுவே முதல் இந்தியா வருகை. ஆறு நாட்கள் பயணமாக கடந்த வியாழக்கிழமை டெல்லி வந்த அவர், இரண்டாம் நாளில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியபோது பெண் செய்தியாளர்களுக்கு நுழைவு மறுக்கப்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் கிளம்பின.

இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா வதோரா, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு மத்திய அரசு, “அந்த ஆப்கான் செய்தியாளர் கூட்டத்தில் இந்தியாவுக்கு எந்த வகையிலும் பங்கில்லை” என விளக்கம் அளித்தது.

இதையடுத்து நேற்று நடைபெற்ற மற்றொரு செய்தியாளர் கூட்டத்தில் ஆப்கான் அமைச்சர் முட்டகி, பெண் பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி வழங்கினார். ஆப்கான் கொடியுடன் நடைபெற்ற அந்த சந்திப்பில் பல ஊடகங்கள் பங்கேற்றன.

அப்போது முன்பு நடந்த தடை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அமைச்சர் முட்டகி விளக்கமளித்தார்: “அந்த தடை ஒரு தொழில்நுட்பத் தவறால் ஏற்பட்டது. பெண்களை நோக்கி எந்த விதமான பாகுபாடும் காட்டவில்லை. குறுகிய நேரத்தில் திட்டமிடப்பட்ட கூட்டமாக இருந்தது. சில ஊடகங்களுக்கே அழைப்புகள் அனுப்பப்பட்டன,” என கூறினார்.

இதற்கிடையில், அவர் உத்தரப்பிரதேசத்தின் சஹரான்பூரில் உள்ள பிரபலமான தாருல் உலூம் தியோபந்த் மதரஸாவுக்கு சென்றார். அங்கு மத தலைவர்களும் மாணவர்களும் அவரை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் ஆக்ராவின் தாஜ்மகால் பார்க்கும் திட்டம் இருந்தபோதிலும், சில காரணங்களால் அந்த பயணம் திடீரென ரத்துசெய்யப்பட்டது.

Facebook Comments Box