பிரதமர் நரேந்திர மோடியை கௌரவித்த உலக நாடுகள் – சர்வதேச விருதுகளின் முழுப் பட்டியல்
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக செல்லும் போதெல்லாம், அந்நாடுகள் வழங்கும் உயரிய விருதுகளை இந்திய மக்களின் பிரதிநிதியாக அவர் ஏற்று வருகிறார். இதுவரை உலகின் பல்வேறு நாடுகள் அவருக்கு வழங்கிய சர்வதேச விருதுகளின் விவரங்களை இந்த சிறப்பு தொகுப்பு தொகுத்து வழங்குகிறது.
2016ஆம் ஆண்டு சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு மன்னரால் “ஆர்டர் ஆஃப் கிங் அப்துல் அசீஸ்” எனும் உயரிய விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட போது, அந்நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதும் அவருக்கு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு பாலஸ்தீனத்திற்கு அரசு முறைப் பயணம் செய்த பிரதமர் மோடிக்கு, பாலஸ்தீன அரசின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டில் பஹ்ரைன், மாலத்தீவு மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள், பிரதமர் மோடியின் உலகளாவிய பங்களிப்பை பாராட்டி தங்களது மிக உயரிய விருதுகளை வழங்கின. தொடர்ந்து 2020ஆம் ஆண்டு அமெரிக்க அரசு “லீஜியன் ஆஃப் மெரிட்” விருதையும், 2021ஆம் ஆண்டு பூடான் அரசு தனது உயரிய தேசிய விருதையும் பிரதமர் மோடிக்கு வழங்கியது.
2023ஆம் ஆண்டு ஃபிஜி, பப்புவா நியூ கினி, எகிப்து, பிரான்ஸ் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள், பிரதமர் மோடியின் தலைமையும் சர்வதேச ஒத்துழைப்பிற்கான பங்களிப்பையும் பாராட்டி உயரிய விருதுகளை வழங்கின. அதன் தொடர்ச்சியாக 2024ஆம் ஆண்டு ரஷ்யா, டொமினிகன் குடியரசு, நைஜீரியா, பார்படோஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் தங்களின் மிக உயரிய விருதுகளால் பிரதமர் மோடியை கௌரவித்தன.
நடப்பாண்டில் மொரீஷியஸ், இலங்கை, சைப்ரஸ், கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, பிரேசில், நமீபியா உள்ளிட்ட நாடுகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு உயரிய தேசிய விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, தற்போது எத்தியோப்பியா அரசு, பிரதமர் மோடிக்கு 28வது சர்வதேச உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளது.