ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய்
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், தவெக கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று சுமார் அரை மணி நேரம் உரையாற்றினார். 2024 ஆம் ஆண்டு தனது அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து மக்களை சந்திக்கும் திட்டத்தை அறிவித்து, சில மாவட்டங்களில் ரோடு ஷோ நிகழ்ச்சிகளையும் நடத்தினார்.
எனினும், கரூரில் நடைபெற்ற ஒரு ரோடு ஷோ நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, விஜயின் சுற்றுப்பயணம் காலவரையற்ற முறையில் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள் அரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் விஜய் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த 9 ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று, தனது தொண்டர்களை நோக்கி உரையாற்றினார்.
இந்த வரிசையில், ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மீண்டும் விஜய் கலந்து கொண்டு, பொதுமக்களுடன் நேரடியாக உரையாடினார். அப்போது சுமார் அரை மணி நேரம் அவர் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சி நிறைவில், தவெக மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், விஜய்க்கு செங்கோல் வழங்கி மரியாதை செய்து கௌரவித்தார்.