ரயில் புறப்பாட்டுக்கு 10 மணி நேரத்திற்கு முன் இருக்கை நிலை அறிவிப்பு
பயணிகள் தங்களின் டிக்கெட் நிலையை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில், சில குறிப்பிட்ட ரயில்களுக்கான முன்பதிவு விதிகளில் இந்திய ரயில்வே மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
புதிய விதிகளின்படி, காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான இறுதி முன்பதிவு பட்டியல், முந்தைய நாள் இரவு 8 மணிக்கே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பிற்பகல் 2:01 மணி முதல் நள்ளிரவு 11:59 மணி வரை மற்றும் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை இயக்கப்படும் ரயில்களுக்கான முன்பதிவு பட்டியல், அந்த ரயில் புறப்படும் நேரத்திற்கு 10 மணி நேரத்திற்கு முன்பாகவே தயாரிக்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகள் தங்கள் பிஎன்ஆர் எண்ணை பயன்படுத்தி ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் மூலம் டிக்கெட் உறுதி நிலையை சரிபார்த்து கொள்ளலாம்.
காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகள், தங்கள் டிக்கெட் உறுதியாகாத நிலையில் மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்ய கூடுதல் நேரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக ரயில்வே விளக்கமளித்துள்ளது.