கும்பகோணம் அருகே மாணவர் தாக்கி உயிரிழப்பு – குடும்பத்தார் போராட்டம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த கலையரசன் என்ற மாணவர், சக மாணவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11ம் வகுப்பு மாணவர்கள் குழுவொன்று கலையரசனை தாக்கியதில் அவர் கடுமையாக காயமடைந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரைக் காப்பாற்ற முடியாமல் அவர் மரணமடைந்தார். தற்போது அவரது உடல் தஞ்சை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தொடர்புடையதாக 15 மாணவர்களை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பியுள்ளனர்.
அந்நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு சாதாரண வழக்கு அல்ல, கொலை குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மாணவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு உடலை எடுக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், மாணவர் கலையரசனின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக, இந்து மக்கள் கட்சியினர் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தனர். மாணவர் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதே நிகழ்வுக்காக பள்ளி வளாகத்தில் தீபம் ஏற்ற முயன்றபோது காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.