வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் இன்று தொடங்கி 6 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
தமிழகத்தில் அக்டோபர் 20 முதல் அடுத்த ஆறு நாட்கள் வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:
“தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், அக்டோபர் 21ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,
இன்று (அக்.20) — நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அக்.21ம் தேதி — திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம்.
அக்.22ம் தேதி — திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை ஏற்படலாம்.
அக்.23ம் தேதி — திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
அக்.24ம் தேதி — வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், மேலும் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்.25ம் தேதி — நீலகிரி மாவட்டத்தின் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை வானிலை:
நாளை (அக்.21) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.