திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ‘கடலம்மா மாநாடு’ நவம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. ‘ஆதி நீயே, ஆழித் தாயே’ என்ற முழக்கத்தின்கீழ், கட்சியின் மீனவர் பாசறை இந்த மாநாட்டை நடத்துகிறது.
இதற்கு முன் நவம்பர் 15ஆம் தேதி திருவையாற்றில் நடைபெறும் தண்ணீர் மாநாட்டை தொடர்ந்து, இந்த கடலம்மா மாநாடும் இயற்கை மற்றும் கடல்சார் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடல்சார் உயிர் வளங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை மையமாகக் கொண்டு மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து உரையாற்ற உள்ளார். சீமானின் முந்தைய விழாக்கள், பேரணிகள் போல் இம்மாநாடும் சமூக வலைதளங்களில் இளைஞர்களிடையே அதிக ஆர்வத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்த கோரி, சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு திடல் அருகே நவம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.