ஆந்திர மாநிலத்தில் வழங்கப்படும் அளவில், தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தை அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் ஏற்பாடு செய்தது. இதில், மாநிலத் தலைவர் வில்சன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் ஜான்சி ராணி தலைமையில 400-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.
ஆந்திரா – தமிழகம் ஒப்பீடு
போராட்டத்தின் போது வில்சன் மற்றும் ஜான்சி ராணி கூறியதாவது:
“ஆந்திரா மாநிலத்தில் சாதாரண மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை, கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.15,000 வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.
ஆனால் தமிழகத்தில், குறைந்தபட்சம் ரூ.1,500 முதல் அதிகபட்சம் ரூ.2,000 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் வருவாய் துறை என இரண்டு துறைகளின் வழியாக வழங்கப்படுவதால் பலருக்கும் சரியான நேரத்தில் நிதி சேர்வதில்லை,” என அவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:
“இதுகுறித்து பலமுறை போராட்டம் நடத்தியுள்ளோம். ஆனாலும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆந்திராவில் வழங்கப்படும் அளவிலேயே தமிழகத்திலும் உதவித் தொகை உயர்த்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம்,” என்றனர்.