EPFO விதிகள் மாற்றம்: காங்கிரஸ், திரிணமூல் கண்டனம்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விதிகளில் செய்யப்பட்ட மாற்றம் பொருளாதாரத்தை தவறாக கையாளும் வகையில் உள்ளது என காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் மூத்த தலைவர், விருதுநகர் தொகுதி எம்பி மாணிக்கம் தாக்கூர், “மோடி அரசின் EPFO விதிகள் கொடூரமானவை. ஓய்வூதியர்களும் வேலை இழந்தவர்களும் தங்கள் சேமிப்பை உடனே பெற முடியாமல் தண்டிக்கப்படுகிறார்கள். இது மக்களின் வாழ்வை பாதிக்கும் செயல். மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

புதிய விதிகள் படி:

  • வேலை இழந்தவர் 12 மாதங்களுக்குப் பிறகு தனது பிஎஃப் பணத்தை திரும்பப் பெறலாம்.
  • ஓய்வூதியம் பெற 36 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
  • EPFO சேமிப்பில் 25% எப்போதும் எடுக்க முடியாது.

“இந்த விதிகள் தொழிலாளர்களுக்கு எந்த லாபமும் தராது. ஒருவர் வேலை இழந்தாலோ அல்லது ஓய்வு பெற்றாலோ தன் சேமிப்பை அணுக பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் அரசு தனது நெருங்கிய நண்பர்களுக்கு கோடிக்கணக்கான தள்ளுபடி வழங்குகிறது. இது சீர்திருத்தம் அல்ல; கொள்ளை” என மாணிக்கம் தாக்கூர் தெரிவித்தார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்பி சாகெட் கோகலே கூறியுள்ளார்: “புதிய EPFO விதிகள் அதிர்ச்சியூட்டும் மற்றும் ஆபத்தானவை. இது சம்பள பெறுவோரின் பணத்தை வெளிப்படையாகத் திருடும். முன்பு வேலையை இழந்தால் 2 மாதத்துக்குள் பிஎஃப் தொகையை பெற முடிந்தது; தற்போது அது 12 மாதமாக உயர்ந்துள்ளது. ஓய்வூதியத்திற்கு முன்பு 2 மாதங்கள் காத்திருக்க வேண்டும்; இப்போது 36 மாதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சேமிப்பு பணத்தில் 25% எப்போதும் எடுக்க முடியாது. இதை ஒரு சாதாரண நடுத்தர வர்க்க நபர் எப்படி எதிர்கொள்வார்?”

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமதுவும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box