“சட்டப்படி எதிர்கொள்வேன்” – சர்ச்சைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் விளக்கம்

“தற்போதைய சர்ச்சையை சட்டப்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்று சமையல் கலைஞர் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்க பலர் என்னை அணுகி வருகின்றனர்.

நீதித்துறையின் செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. சட்டப்படி உண்மை நிலைநாட்டப்படும் என்பதில் உறுதி வைத்து, இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்று திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன்.

இந்த பிரச்சினை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலும், பொது விவாதத்திலும் ஈடுபடவோ, ஊக்குவிக்கவோ, பதிலளிக்கவோ நான் விரும்பவில்லை.

ஆன்லைன் ஊடகங்களுக்கு எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிடாமல் இருக்க அனைத்து ஊடக நிறுவனங்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் இந்த சர்ச்சையை சட்டப்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன்.

எனது நலனில் அக்கறை காட்டி, எனக்கு உறுதுணையாக இருந்து ஆதரவு மற்றும் பிரார்த்தனைகள் வழங்கிய அனைத்து நலன்விரும்பிகளுக்கும் எனது இதயபூர்வமான நன்றி” என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்தார்.

தன்னை திருமணம் செய்யப் போகிறேன் என்று கூறி ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக சில மாதங்களுக்கு முன் போலீசில் புகார் அளித்தார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு, நீதி வேண்டும் என்று அவர் முயற்சித்து வருகிறார்.

Facebook Comments Box