டாஸ்மாக் முறைகேடு புகாரில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு தடை கோரிய அமலாக்கத் துறையின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, அமலாக்கத் துறை ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தியது. இதற்கு எதிராக இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “அமலாக்கத் துறைக்கு ஆதாரமின்றி சோதனை, பறிமுதல் செய்ய அதிகாரம் இல்லை” எனக் கூறி, அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், அந்த உத்தரவை மீறி அமலாக்கத் துறை மேல்முறையீட்டு அதிகாரி சம்மன் அனுப்பியதாகக் கூறி, ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதில், உயர் நீதிமன்றம் அமலாக்கத் துறை உதவி இயக்குநர் விகாஸ் குமாரை ஆஜராக உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் அமர்வு, “இப்போதைக்கு உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது” எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.