தயாளு அம்மாள் போட்ட பிள்ளையார் சுழி – துரைமுருகன் சுவாரஸ்யம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ‘திமுக-75 அறிவுத் திருவிழா’ நிகழ்ச்சியில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அரசியல் பயணத்தில் அனுபவித்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்தார்.
1971-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு, அவர் முன்னாள் தலைவர் கருணாநிதி உடன் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது கருணாநிதி, “துரை, இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறாயா?” என்று கேட்டார். துரைமுருகன் பதிலளித்து, “நான் வக்கீலாக இருக்கிறேன், அதுதான் எனக்கு பிடிக்கும்” என்றார். கருணாநிதி “வேண்டாமா உனக்கு” என்று சொல்லி சென்றார்.
சாப்பிட்ட பிறகு கைகழுவ சென்ற துரைமுருகனை தயாளு அம்மாள் அணுகி, “ஏன் சீட்டு வேண்டாம் என்று சொன்னாய்?” என்று கேட்டார். துரைமுருகன் “செலவு பண்ண முடியாது” என்றார். அதற்கு தயாளு அம்மாள் பதிலாக, “அதெல்லாம் அவர் கொடுப்பார், நீ நில்” என்று கூறி ரூ.10 ஆயிரம் வழங்கி ஆதரவானார். துரைமுருகன், “நான் எம்எல்ஏ, அமைச்சர், பொதுச்செயலாளராக இருக்கிறேன் என்றால், அதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் தயாளு அம்மாள் தான்” என்று குறிப்பிட்டார்.
மேலும், துரைமுருகன் தமிழரின் வரலாற்றையும் அரசியல் எதிர்காலத்தைப் பற்றி குறிப்பிடத் தொடங்கி, “ராஜராஜ சோழன் தனது ஆட்சியை காந்தளூர் சாலையில் மட்டுமே வைத்தார். ஆனால் மகன் ராஜேந்திர சோழன் தாய்லாந்து வரை தன் ஆட்சியை நிறுவினார். உதயநிதி ஒருநாள் ராஜேந்திர சோழனாக மாறுவார் என்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இது என்னுடைய அரசியல் கணக்கு” என்றும் தெரிவித்துள்ளார்.