கமிந்து மெண்டிஸ் அதிரடியில் இலங்கை வெற்றி
இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே பயணத்தில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டி-20 போட்டி நேற்று ஹராரே நகரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழந்து 175 ரன்கள் பெற்றது. தொடக்க வீரர் பிரையன் பென்னட் 57 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்தார். சிகந்தர் ராசா 28, ரியான் பர்ல் 17 மற்றும் சீயன் வில்லியம்ஸ் 14 ரன்கள் சேர்த்தனர்.
176 ரன்கள் இலக்காக பேட் செய்த இலங்கை அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழக்கையில் 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் பதும் நிசங்கா 32 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்கள், குசால் மெண்டிஸ் 38 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தனர். இறுதிப் பகுதியில் கமிந்து மெண்டிஸ் 16 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 41 ரன்கள், துஷன் ஹமந்தா 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்துக் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார்.
4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. தொடரின் இரண்டாவது ஆட்டம் வரும் 6-ஆம் தேதி நடைபெறும்.