தீபாவளி முன்னெச்சரிக்கை: இன்று, நாளை ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழுத் தயார்நிலையில் — சுகாதாரத்துறை உத்தரவு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று (19) மற்றும் நாளை (20) அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் (PHC) முழுமையான தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிப்புகளால் தீக்காயங்கள் மற்றும் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், குறிப்பாக மேம்படுத்தப்பட்ட PHC-களில், தீக்காயங்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பெரிய அளவிலான காயங்கள் ஏற்பட்டால், உடனடியாக முதலுதவி அளித்து, அந்த நோயாளிகளை மாவட்ட தலைமையக மருத்துவமனை அல்லது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அதேபோல், ரத்த வங்கிகளில் போதிய அளவு ரத்தம் கையிருப்பில் இருக்க வேண்டும். அவசரகாலங்களில் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநில அளவில் ஏதேனும் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டால், உடனடியாக dphepi@nic.in என்ற மின்னஞ்சலுக்கும், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் 94443 40496 மற்றும் 87544 48477 ஆகிய எண்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இன்றும் நாளையும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் தங்களின் பணியிடங்களுக்கு அருகில் இருந்து, அழைப்பின்போது உடனடியாக சேவைக்கு வருமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், 424 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் எனவும் இயக்குநர் சோமந்தரம் வலியுறுத்தியுள்ளார்.