பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: நீதிமன்றத்தில் ஆஜராகாத ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்குக்கு நீதிபதி கடும் கண்டனம்!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கைதிகளின் பற்களைப் பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகாரில், தொடர்ந்து நீதிமன்ற விசாரணையில் ஆஜராகத் தவறிய ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்குக்கு நெல்லை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், மனித உரிமை மீறல் வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நீதிபதி சத்யா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோதே இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) பல்வீர் சிங் பணியாற்றியபோது, விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கைதிகளின் பற்களைப் பிடுங்கி கொடூரமான முறையில் சித்ரவதை செய்ததாகப் பெரும் சர்ச்சை வெடித்தது. இச்சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியதுடன், நெல்லை மாவட்ட சிபிசிஐடி போலீசார் இந்த விவகாரத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
நீதிமன்றத்தின் உத்தரவு: “வழக்கின் அடுத்தகட்ட விசாரணையின் போது, முக்கியக் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கும் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் எவ்வித காரணமுமின்றி கண்டிப்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.”
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கில் தொடர்புடைய இதர காவல் அதிகாரிகள் மற்றும் ஏட்டுகள் உட்பட மொத்தம் 8 பேர் நேரில் ஆஜராகியிருந்தனர். ஆனால், வழக்கின் முதன்மைக் குற்றவாளியான ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மட்டும் ஆஜராகாததால் அதிருப்தி அடைந்த நீதிபதி சத்யா, அவரைக் கடுமையாகக் கடிந்து கொண்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் பல்வீர் சிங் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.




