தமிழகத்தின் 32 சார்பதிவாளர் அலுவலகங்களில் விசி அண்ட் ஏசி சோதனை: ரூ.37.75 லட்சம் பறிமுதல்!
சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் முறைகேடுகள் மற்றும் லஞ்ச நடமாட்டத்தைத் தடுக்கும் பொருட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் அதிரடி மெகா சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மொத்தம் 32 சார் பதிவாளர் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த அதிரடிச் சோதனையில், கணக்கில் வராத ரூ.37 லட்சத்து 75 ஆயிரத்து 650 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, மதுரை விளாங்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.90,000 பறிமுதல் செய்யப்பட்டதுடன், இதுதொடர்பாக ஆவண எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர் என 3 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள பொறுப்பு சார் பதிவாளரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், மதுரை அலங்காநல்லூர் அருகே பொதும்பு பத்திரப் பதிவு அலுவலகத்தில் நடத்திய ஆய்வில் கணக்கில் வராத ரூ.11,800 சிக்கியது.
இதற்கிடையே, ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்திய போது, பத்திரப் பதிவுக்காக வந்த முதியவர் ஒருவரிடமிருந்த ரூ.23,000 குறித்து அதிகாரிகள் விளக்கம் கேட்டதால் தற்காலிக வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அந்த முதியவர் பணத்திற்கான உரிய ஆதாரங்களை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து அந்தப் பணம் அவரிடமே பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய இந்த திடீர் வேட்டை, அரசு அலுவலக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




