கும்பகோணம் அருகே அதிமுக நிர்வாகி தற்கொலை: நேரில் அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி – ரூ.55 லட்சம் நிதியுதவி மற்றும் குழந்தைக்கு இலவசக் கல்வி அறிவிப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த அதிமுக (AIADMK) நிர்வாகி மகேந்திரன் என்பவர், கட்சியில் நிலவி வரும் பிளவுகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திருப்பனந்தாளில் உள்ள மகேந்திரனின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS), மறைந்த மகேந்திரனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அவரது குடும்பத்தினரைக் கட்டி அணைத்துத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
மகேந்திரனின் குடும்பத்திற்கு ரூ.55 லட்சம் நிதி மற்றும் கல்விச் செலவு: இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கட்சியின் மீதுள்ள பற்றால் யாரும் இதுபோன்ற விபரீத முடிவுகளை இனிமேல் எடுக்கக் கூடாது” எனத் தொண்டர்களுக்குக் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தார்.
பாதிக்கப்பட்ட மகேந்திரனின் குடும்பத்திற்கு அதிமுக தலைமைச் கழகம் சார்பில் ₹30 லட்சம் ரூபாயும், தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ₹25 லட்சம் ரூபாயும் என மொத்தம் 55 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று இபிஎஸ் அதிரடியாக அறிவித்தார். மேலும், மறைந்த மகேந்திரனின் ஒரு வயது பெண் குழந்தையின் எதிர்காலக் கல்விச் செலவு முழுவதையும் அதிமுகவே ஏற்கும் என்றும் அவர் உறுதியளித்தார். தங்களது கட்சியின் தீவிரத் தொண்டனின் இழப்பிற்குப் பொதுச்செயலாளரே நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதோடு, குடும்பத்திற்கும் மாபெரும் நிதியுதவியை அறிவித்துள்ளது அப்பகுதி அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




