ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!
அண்மையில் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பி, தற்போது தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janta Party – CJP) அமைப்பினர், தங்களை அதிகாரப்பூர்வமாக ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். “வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளைப் போன்றவர்கள், சமூகத்தின் ஓட்டுண்ணிகள்” என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படும் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இணையத்தில் வெறும் நையாண்டியாக (Satire) ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம், தற்போது Gen-Z மற்றும் லட்சக்கணக்கான இளைஞர்களின் பேராதரவோடு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக மற்றும் ‘சோம்பேறி’ என்ற விசித்திரமான கொள்கைகளுடன் தொடங்கப்பட்ட இந்த ‘மீம்’ கட்சி, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் ஊழலுக்கு எதிரான இளைஞர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய வடிகாலாக மாறியுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக மதுரையில் பேரணி: அண்மையில் இந்த அமைப்பின் சமூக வலைதளக் கணக்குகளை மத்திய அரசு முடக்கியதைத் தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட “கரப்பான் பூச்சி பேரணி” நடத்தப்பட்டது.
மதுரை காந்தி மியூசியத்தில் தொடங்கி தமுக்கம் மைதானம் வரை நடைபெற்ற இப்போராட்டத்தில், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை வழங்கக் கோரியும், இளைஞர்களை அவமதிக்கும் போக்கைக் கண்டித்தும் பதாகைகளை ஏந்தி அதிரடி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
வெறும் ஆன்லைன் கேலியாகத் தொடங்கப்பட்ட ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) தற்போது தேர்தல் அரசியலை நோக்கிப் பதியப்பட உள்ள நடவடிக்கை, தமிழகம் மற்றும் இந்திய அரசியல் களத்தில் புதிய தலைமுறை இளைஞர்களின் மாற்று அரசியல் சிந்தனையை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.



