ஊழல் விசாரணைக்குத் தயங்கும் தவெக அரசு? – நேர்மையான உயர் அதிகாரிகள் அதிருப்தி எனத் தகவல்
சென்னை:
திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களுக்கு விசாரணை அனுமதி வழங்குவதில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு மெத்தனம் காட்டி வருவதாக, நேர்மையான உயர் அதிகாரிகள் வட்டாரத்தில் அதிருப்தி எழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக முன்னாள் அமைச்சர்களான செந்தில்பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் திரட்டப்பட்டு, அவர்கள் மீது சட்டப்பூர்வ விசாரணை நடத்த தற்போதைய தவெக அரசிடம் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் உயர் அதிகாரிகள் தரப்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இருப்பினும், “மாற்று அரசியல்”, “ஊழலற்ற நிர்வாகம்” என்ற முழக்கங்களுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவிதமான விசாரணை அனுமதியும் வழங்காமல் அமைதி காத்து வருவதாகக் கூறப்படுகிறது. முந்தைய ஆட்சிக்கால ஊழல்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய அரசின் இந்த மௌனம் நேர்மையான அதிகாரிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. “இதுதான் நீங்கள் சொன்ன மாற்று அரசியலா?” என்று தலைமைச் செயலக வட்டாரங்களில் உள்ள நேர்மையான உயர் அதிகாரிகள் புலம்பி வருவதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




