அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதி கோரி தவெக அரசுக்கு இ.டி. கடிதம்: 120 நாட்களுக்குள் பதிலளிக்காவிட்டால் ‘தானாக ஒப்புதல்’ என அமலாக்கத்துறை அதிரடி கெடு!
சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவின் முக்கியப் புள்ளியும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனைச் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் நேரில் விசாரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு, தற்போதைய தவெக தலைமையிலான தமிழக அரசுக்கு மத்திய அமலாக்கத்துறை (Enforcement Directorate – ED) மீண்டும் ஒரு புதிய கடிதத்தை அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது மற்றும் பணமோசடி (Money Laundering) தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து, அவரது பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பான தொடர் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, முந்தைய திமுக ஆட்சியின்போதே அனிதா ராதாகிருஷ்ணனை விசாரணை செய்ய அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை முறைப்படி கடிதம் அனுப்பியிருந்தது. இருப்பினும், அப்போதைய ஆளுங்கட்சியான திமுக அரசு தங்களது கட்சித் பிரமுகரை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு இறுதிவரை அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ள சூழலில், இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை மீண்டும் கையில் எடுத்துள்ளது. அனிதா ராதாகிருஷ்ணனைத் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, புதிய தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை தற்போது மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதத்தை அனுப்பியுள்ளது.
அமலாக்கத்துறை அனுப்பியுள்ள அந்த 4 பக்கங்கள் கொண்ட அதிரடி கடிதத்தில், “இந்தக் கடிதம் பெறப்பட்ட 120 நாட்களுக்குள் (4 மாதங்கள்) மாநில அரசு உரிய அனுமதியை வழங்காவிட்டால், சட்ட விதிகளின்படி விசாரணைக்கு ‘தானாகவே ஒப்புதல்’ (Deemed Approval) வழங்கப்பட்டதாகக் கருதப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் பாயும்” என்று மிகக் கடுமையான கெடு விதிக்கப்பட்டுள்ளதாகத் டெல்லி மற்றும் கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் தான், மற்றொரு முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு எதிரான நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பதற்கும் அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்த நிலையில், தற்போது அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் இ.டி. வலைவீசியுள்ளது. இந்த அடுத்தடுத்த மத்திய உளவுத்துறையின் அதிரடி நகர்வுகள், முன்னாள் திமுக அமைச்சர்கள் மற்றும் தற்போதைய தவெக அரசின் நிர்வாக முடிவுகளுக்கு இடையே பெரும் அரசியல் உஷ்ணத்தைக் கிளப்பியுள்ளது.





