திமுக ஆட்சியைப் போல தவெக ஆட்சியிலும் வன்முறை தொடர்கிறது; ‘மாற்று அரசியல்’ இதுதானா? – சீமான் காரசாரக் கேள்வி!
சென்னை: “தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியைப் போலவே, தற்போதைய தவெக ஆட்சியிலும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் போதைக்கும்பல் ஒன்று செய்தியாளர் மீது நடத்திய கொடூரத் தாக்குதலைச் சுட்டிக்காட்டி அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் போதை ஆசாமிகளின் அட்டூழியங்களும், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் தாக்குதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாக அவர் பெரும் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய மாநில அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ள சீமான், “தமிழகத்தில் தற்போது நடப்பது தவெக ஆட்சியா? அல்லது முந்தைய திமுக ஆட்சியா?” என்றும், “தவெக மேடைகளில் முழங்கிய ‘மாற்று அரசியல்’ என்பது இதுதானா?” என்றும் வினா தொடுத்துள்ளார். அத்துடன், அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற உடனே முதற்கட்டமாக கையொப்பமிட்ட ‘போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு அதிரடிப்படை அமைப்பு’ (Special Task Force) தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறது? என்றும் சீமான் தனது அறிக்கையில் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.




