தவெக அமைச்சரவையில் சமூக நீதி: 4 பெண்களுக்கு வாய்ப்பு; சென்னை சுற்றுவட்டாரத்தில் மட்டும் 11 பேருக்கு அமைச்சர் பதவி!
சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அமைச்சரவையில், சமூக நீதி மற்றும் பிராந்திய வாரியான சமநிலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 33 அமைச்சர்களில், 4 பெண் எம்.எல்.ஏ-க்களுக்கும், 7 பட்டியலின (SC) சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் தகுந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் வெற்றி பெற்ற 14 சட்டமன்ற உறுப்பினர்களில் 7 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், ராஜ்மோகன், வெங்கட்ராமன், மரியவில்சன் மற்றும் குமார் ஆகிய சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேருடன் சேர்த்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து மட்டுமே மொத்தம் 11 பேர் அமைச்சர்களாகியுள்ளனர். இதில் ஸ்ரீபெரும்புதூர் தென்னரசு, காஞ்சிபுரம் ரஞ்சித், தாம்பரம் சரத்குமார் மற்றும் அரக்கோணம் காந்திராஜ் ஆகியோர் அடங்குவர்.
அமைச்சரவையில் பட்டியலின சமூகப் பிரதிநிதித்துவமாக எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜ்மோகன், அவிநாசி எம்.எல்.ஏ கமலி, முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகனும் ராசிபுரம் எம்.எல்.ஏ-வுமான லோகேஷ் தமிழ்செல்வன், அரக்கோணம் காந்திராஜ், ஒட்டப்பிடாரம் மதன்ராஜ், ஸ்ரீபெரும்புதூர் தென்னரசு மற்றும் மேலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஸ்வநாதன் ஆகிய 7 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. அதேபோல், தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக சிவகாசி கீர்த்தனா, அவிநாசி கமலி, குமாரபாளையம் விஜயலட்சுமி மற்றும் ராஜபாளையம் ஜெகதீஸ்வரி ஆகிய 4 பெண் எம்.எல்.ஏ-க்கள் தவெக அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர்.
மண்டல வாரியான அமைச்சர்கள் விபரம்:
- கொங்கு மண்டலம் (9 அமைச்சர்கள்): செங்கோட்டையன், அருண்ராஜ், விஜய் தமிழன் பார்த்திபன், லோகேஷ் தமிழ்செல்வன், விஜயலட்சுமி, விஜய் பாலாஜி, சம்பத் குமார், விக்னேஷ் மற்றும் கமலி.
- டெல்டா மண்டலம் (4 அமைச்சர்கள்): ஸ்ரீரங்கம் ரமேஷ், கடலூர் ராஜ்குமார், கும்பகோணம் வினோத் மற்றும் அறந்தாங்கி முகமது பர்வேஸ்.
- தென் மாவட்டங்கள் (8 அமைச்சர்கள்): தவெக தரப்பில் சி.டி.ஆர். நிர்மல் குமார், பிரபு, ஜெகதீஸ்வரி, ராஜிவ், ஸ்ரீநாத், மதன்ராஜா ஆகிய 6 பேரும், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தரப்பில் விஸ்வநாதன், ராஜேஷ் குமார் ஆகிய இருவர் என மொத்தம் 8 பேர் தென் மண்டலப் பிரதிநிதிகளாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.



