அழகு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பயங்கரவாதிகள்! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி தரும் உத்திகள்: ஒரு சிறப்பு பார்வை!
புதுடெல்லி: சர்வதேச அளவில் தேடப்படும் பயங்கரவாதிகள் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாத அமைப்புகள், தங்களின் அடையாளங்களை மறைத்து உளவு அமைப்புகளிடம் இருந்து தப்பிப்பதற்காக தற்போது அதிநவீன ‘அழகு சிகிச்சைகளை’ (Cosmetic Procedures) ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது பாதுகாப்புப் படையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகரில் கைதான லஷ்கர் பயங்கரவாதி!
இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தோல்வி அடைந்த பின்னரும், இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தவும் ஸ்லீப்பர் செல் (Sleeper Cells) நெட்வொர்க்குகளை உருவாக்கவும் பயங்கரவாதிகளை அது சட்டவிரோதமாக ஊடுருவ வைக்கிறது. அந்த வகையில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, லாகூரைச் சேர்ந்த ‘சைனீஸ்’ என்கிற முகமது உஸ்மான் ஜட் என்ற பயங்கரவாதிக்குப் போதிய பயிற்சி அளித்து இந்தியாவுக்குள் அனுப்பி வைத்தது.
சட்டவிரோதமாகக் காஷ்மீருக்குள் நுழைந்த உஸ்மான் ஜட், பல ஆண்டுகளாகக் கடுமையான முடி உதிர்வு மற்றும் வழுக்கைத் தலைப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. காஷ்மீரின் அமைதியான சூழலைக் கண்ட அவனுக்கு, முகாம்களில் போதிக்கப்பட்ட தீவிரவாதக் கொள்கைப் பிடிப்பு தளர்ந்தது. இதனால் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதை விட, தனது தோற்றத்தை மாற்றுவதிலும் வழுக்கைத் தலைக்குச் சிகிச்சை எடுப்பதிலும் அதிக அக்கறை காட்டினான். இதையடுத்து, ஸ்ரீநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவன் முடி மாற்று அறுவை சிகிச்சை (Hair Transplant) செய்துகொண்டான். சிகிச்சை முடிந்து குணமடைந்த நிலையில், ஸ்ரீநகர் காவல்துறையினரால் அவன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டான்.
தோற்றத்தை மாற்றும் புதிய உத்தி!
விசாரணையில், தங்களைக் காவல்துறையினர் அடையாளம் காண முடியாதவாறு மாற்றிக்கொள்வதற்காகவே பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முடி மாற்று அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் காஸ்மெடிக் சிகிச்சைகளை திட்டமிட்டுப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
இதேபோல், வங்கதேசத்தில் லஷ்கர் அமைப்பின் பிரிவை ஏற்படுத்தியவனும், கடந்த மார்ச் மாதம் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டவனுமான ஷபீர் அகமது லோன் என்பவன், குருகிராமில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் ‘பல் மாற்று சிகிச்சை’ (Dental Implant) செய்து தோற்றத்தை மாற்ற முயன்றுள்ளான். முன்னதாக, காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராகப் போஸ்டர் ஒட்டிய வழக்கில், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் பயங்கரவாத ஆள்சேர்ப்பில் ஈடுபட்ட குழுவினர் கைதாகினர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாகவே இந்த ஷபீர் அகமது லோன் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னுதாரணம் யார்?
பல ஆண்டுகளுக்கு முன்பே உளவு அமைப்புகளிடம் சிக்காமல் இருக்க ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ மூலம் தனது தோற்றத்தை மாற்றிய லஷ்கர் அமைப்பின் முக்கியப் புள்ளி சாஜித் மிர் என்பவனின் உத்தியையே, தற்போதுள்ள பயங்கரவாதிகளும் தங்களின் புதிய அடையாளத்திற்காகப் பின்பற்றி வருவதாகப் புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர்.
AI மற்றும் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்திற்கு சவால்!
இன்றைய காலகட்டத்தில் சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் போக்குவரத்து மையங்களில் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் குற்றவாளிகளைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பயோமெட்ரிக் முக அங்கீகார மென்பொருட்களையே (Facial Recognition Technology) பெரிதும் சார்ந்துள்ளனர்.
இந்த மென்பொருட்கள் ஒரு நபரின் வெறும் புகைப்படத்தை மட்டும் பார்க்காமல், அவரின் கண்கள், மூக்கு, தாடை, புருவம் மற்றும் நெற்றியின் எல்லை ஆகியவற்றுக்கு இடையேயான துல்லியமான, நிலையான அளவுகளைக் கண்காணித்து வரைபடமாக்குகின்றன (Facial Mapping). எனவே, தேடப்படும் பயங்கரவாதிகள் பிடிபடாமல் உயிர் பிழைப்பதற்காக, தங்களின் முகத்தில் உள்ள முக்கிய அடையாளப் புள்ளிகளை (Facial Landmarks) மாற்றியமைக்க இத்தகைய அறுவை சிகிச்சைகளை நாடுகின்றனர்.
தற்போது இந்த விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள NIA-வின் குற்றப்பத்திரிகை ஆவணங்களில், பயங்கரவாதிகளின் இந்த ‘அழகு சிகிச்சை மோகம்’ மற்றும் அதற்கான ஆதாரங்கள் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






