“காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி; கூட்டணிக் கட்சிகளையே முதுகில் குத்தும்” – பிரதமர் மோடி கடும் தாக்கு!
பெங்களூரு: “காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி; அது தனது சுயநலத்திற்காகத் தனது கூட்டணிக் கட்சிகளையே முதுகில் குத்தும்” எனப் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அவர் கூறுகையில், “கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையே மிகவும் நெருக்கமான உறவு இருந்து வந்தது. காங்கிரஸ் பலமுறை அரசியல் நெருக்கடிகளில் சிக்கியபோது, அதனை மீட்டெடுத்தது திமுகதான். 2014-க்கு முந்தைய 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி நிலைத்திருந்ததற்குக் கூட திமுகவின் ஆதரவே முக்கியக் காரணமாக இருந்தது,” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வந்த அதே திமுக, இன்று அரசியல் சூழல் மாறியவுடன் காங்கிரஸின் நம்பிக்கைத் துரோகத்திற்கு ஆளாகியுள்ளது. அதிகார வெறி கொண்ட காங்கிரஸ் கட்சி, தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே திமுகவின் முதுகில் குத்திவிட்டது. காங்கிரஸ் ஒருபோதும் கூட்டணிக் கட்சிகளுக்கு விசுவாசமாக இருந்ததில்லை. அது எப்போதும் மற்றொரு கட்சியின் முதுகில் சவாரி செய்யும் ஒரு ஒட்டுண்ணி (Parasite) போலவே செயல்படுகிறது,” எனக் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு, புதிய அரசியல் சக்தியான தவெக-விற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளதை முன்வைத்து பிரதமரின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




