மேற்குவங்கத்தில் புதிய சரித்திரம்: முதல் பா.ஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!
கொல்கத்தா: மேற்குவங்க மாநில அரசியலில் மிகப்பெரிய மாற்றமாக, அம்மாநிலத்தின் முதல் பாரதிய ஜனதா கட்சி முதலமைச்சராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்றுக் கொண்டார். கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்குப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 207 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்துள்ளது. இதன் மூலம் 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் கலந்துகொள்ள திறந்த வாகனத்தில் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், கட்சியின் மூத்த தொண்டரான 98 வயது மக்னலால் சர்க்காரின் காலில் விழுந்து பிரதமர் ஆசி பெற்றது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பா.ஜ.க-வுக்கு இமாலய வெற்றி அளித்த மேற்குவங்க மக்களுக்கு மேடையிலேயே சாஷ்டாங்கமாக விழுந்து பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
சுவேந்து அதிகாரியைத் தொடர்ந்து, திலிப் கோஷ், அக்னி மித்ரா பால், அசோக் கிர்தானியா மற்றும் சுதிராம் டூடு ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஜே.பி.நட்டா, மற்றும் மாநில முதலமைச்சர்கள் யோகி ஆதித்யநாத், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டு புதிய அரசுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.





