மேற்கு வங்கத்தில் சாதனை அளவு வாக்குப்பதிவு: இறுதிக்கட்டத்தில் 91.71% வாக்குகள் பதிவு – மே 4-ல் முடிவு!
மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 91.71 சதவீத வாக்குகள் பதிவாகிப் பெரும் சாதனை படைக்கப்பட்டுள்ளது. 294 தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்தில், முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு நேற்று விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. குறிப்பாக, முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியிலும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது குறிப்பிடத்தக்கது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில், சுமார் 41 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மிகக்கடுமையான போட்டி நிலவும் இத்தேர்தலில், இந்த அதிகப்படியான வாக்குப்பதிவு யாருக்குச் சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த மேற்கு வங்கத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப்போகும் இந்த வாக்குகள் வரும் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.





