திருப்பூரில் பரபரப்பு: ரூ. 8,000 டோக்கன் விநியோகித்த திமுகவினர் சிறைபிடிப்பு – அதிகாரிகளிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!
திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்குப் பரிசு கூப்பன்களுக்கான டோக்கன் வழங்கிய திமுகவினரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
திருப்பூர் தெற்கு தொகுதி, அயன் நகர் 5-வது வீதியில் திமுகவிற்கு வாக்களிக்குமாறு கூறி, 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கூப்பன் போன்று அச்சிடப்பட்ட டோக்கன்களை இருவர் வீடு வீடாக விநியோகித்து வந்துள்ளனர். இதனை கவனித்த அப்பகுதி பொதுமக்கள், அந்த நபர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
வீடியோ வைரல்:
தாங்கள் வெறும் துண்டுப் பிரசுரங்களை மட்டுமே விநியோகிப்பதாக அந்த நபர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவர்கள் வைத்திருந்த டோக்கன்களைப் பறிமுதல் செய்து, இருவரையும் சிறைபிடித்தனர். பின்னர், தேர்தல் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து, அவர்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பொதுமக்கள் திமுகவினரை மடக்கிப் பிடித்து கேள்வி கேட்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தேர்தல் விதிமுறைகளை மீறி பணப்பட்டுவாடா மற்றும் டோக்கன் விநியோகத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




