“மத்திய அரசு நிதியை திமுக அரசு கொள்ளையடிக்கிறது” – பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் கடும் சாடல்!
தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களுக்கான நிதியில் திமுக அரசு முறைகேடு செய்து வருவதாக பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மேடையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராமச்சந்திரன் மற்றும் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் கவிதா ஸ்ரீகாந்த் ஆகியோரை ஆதரித்து, அறந்தாங்கியில் பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நிதின் நபின், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
“பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஏழை எளிய மக்களுக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கும் ‘ஜல் ஜீவன்’ திட்டத்திற்காக மத்திய அரசு வழங்கிய நிதியைத் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு கொள்ளையடித்துவிட்டது. மத்திய அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய விடாமல் தடுத்து, அதில் முறைகேடு செய்வதையே திமுக வாடிக்கையாகக் கொண்டுள்ளது.”
தமிழகத்தில் நிலவும் ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் அந்தப் பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.




