சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில் உள்ள கண்ணன் என்பவருக்குச் சொந்தமான எக்ஸெல் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அடுத்தடுத்து நான்கு முறை வெடிச்சத்தம் கேட்டதுடன், சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றளவுக்குப் பலத்த அதிர்வு ஏற்பட்டதால் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.
இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமான நிலையில், தொழிலாளர்கள் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. விபத்தில் படுகாயமடைந்த ராஜ்குமார், செல்வம், ரமேஷ் ஆகிய மூன்று தொழிலாளர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆலைக்குள் இன்னும் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைப் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அங்கிருந்த மருத்துவர்களிடம் கேட்டறிந்த அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




