“உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் குடும்பம் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது” – சாத்தூரில் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேச்சு!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று முறம்பு வண்டி பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டுத் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். திறந்த வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பொதுமக்களிடையே உரையாற்றிய நயினார் நாகேந்திரன், திமுக அரசு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “முதலமைச்சர் ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை அடுத்த முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகக் கோடிக்கணக்கான ரூபாய்களை வாரி இறைத்து வருகிறார். ஆனால், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் நிச்சயம் தாமரை சின்னத்தைத் தான் தேர்ந்தெடுப்பார்கள்” என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
தொடர்ந்து திமுக ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு குறித்துப் பேசிய அவர், “கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. மாறாகப் போதைப்பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குற்றச் சம்பவங்களே அதிகரித்து காணப்படுகின்றன” என்று குற்றம்சாட்டினார். இறுதியாக, சாத்தூர் தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளைத் தான் வெற்றி பெற்றவுடன் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவேன் என அவர் வாக்குறுதி அளித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் களமிறங்கியுள்ளது, அந்தத் தொகுதியின் தேர்தல் களத்தை நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாற்றியுள்ளது.




