“தோல்வி பயத்தில் திமுகவினர் டோக்கன் விநியோகம்” – பெரம்பூர் பாமக வேட்பாளர் திலகபாமா அதிரடி குற்றச்சாட்டு!
சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாமக வேட்பாளர் திலகபாமா இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின் தொடக்கமாக, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது உருவப்படங்களுக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேளதாளங்கள் முழங்க வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த திலகபாமாவுக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கடைகளில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டிய அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக மீது கடுமையான புகாரை முன்வைத்தார். தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயம் திமுகவினருக்கு வந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதன் காரணமாக வாக்காளர்களுக்குக் கடைகள் மூலமாக திமுகவினர் டோக்கன்களை விநியோகித்து வருவதாகக் குற்றம்சாட்டினார். தேர்தல் விதிமுறைகளை மீறி இத்தகைய செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதாக அவர் தெரிவித்த புகார் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.




