“தமிழகத்தை ஸ்டாலின் குடும்பத்தினர் கூறுபோட்டு ஆட்டிப்படைக்கின்றனர்”: எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
ஜோலார்பேட்டை:
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்பத்தினர் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு மாநிலத்தைக் கூறுபோட்டு ஆட்டிப்படைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அரசு மீதான தனது காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது அவரது மருமகன் சபரீசனும் பொதுவெளிக்கு வந்துவிட்டார்” என்று குறிப்பிட்டார்.
மேலும், ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் மற்றும் துர்கா ஸ்டாலின் என ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே தமிழகத்தின் அதிகார மையங்களாக மாறி மாநிலத்தைப் பிரித்து ஆதிக்கம் செலுத்தி வருவதாக அவர் சாடினார். “ஒரு தனி குடும்பம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிகாரம் செய்வதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் இந்த குடும்ப அரசியலுக்கு வரவிருக்கும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.




