“தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க மாட்டேன்”: செல்வப்பெருந்தகை அதிரடி அறிவிப்பு!
சென்னை:
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் தான் நீடிக்கப் போவதில்லை என்று கே. செல்வப்பெருந்தகை அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகை, இன்று மாங்காடு பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது எதிர்கால அரசியல் திட்டம் குறித்து விளக்கமளித்தார்.
அப்போது பேசிய அவர், “2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக வேறு யாராவது பணியாற்றுவார்கள். நான் எனது சொந்தத் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரில் முழுநேரமாக மக்கள் பணியாற்றுவேன்” என்று தெரிவித்தார். தேர்தல் முடிந்தவுடன் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக அவர் வெளிப்படையாக அறிவித்துள்ளது, காங்கிரஸ் கட்சியினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.




