தாம்பரம் அருகே பரபரப்பு: பேனர் வைப்பது தொடர்பாக திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் பொதுமக்களுடன் வாக்குவாதம்!
சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தினாபுரம் பகுதியில், பேனர் வைப்பது தொடர்பாக திமுக பெண் கவுன்சிலரின் குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் 38-வது வார்டு கவுன்சிலர் சரண்யாவின் தந்தைக்கும், அஸ்தினாபுரம் வினோபாஜி நகர் பகுதி மக்களுக்கும் இடையே பேனர் வைப்பதில் நீண்ட நாட்களாகப் பிணக்கு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அப்பகுதியில் உள்ள கோயில் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்களை வருவாய்த்துறையினர் முன்னதாக அகற்றினர். இந்நிலையில், அதே இடத்தில் பொதுமக்கள் புதிய பேனர் ஒன்றை அமைக்க முயன்றபோது, கவுன்சிலர் சரண்யாவின் தந்தை மற்றும் கணவர் ஆகியோர் நேரில் வந்து தடுத்துள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி கவுன்சிலரின் குடும்பத்தினர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




