அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!
தென்காசி அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பரப்புரை வாகனத்தைச் தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்திச் சோதனை மேற்கொண்டனர். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளியை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதி வேட்பாளர் கடம்பூர் ராஜுவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காகச் சாலை மார்க்கமாகப் பயணித்தார்.
தென்காசி மாவட்டத்தின் கிழக்கு எல்லைப் பகுதியான கரட்டுமலை சோதனைச் சாவடியில், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தைப் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர். தேர்தல் விதிமுறைகளின்படி அதிகாரிகள் வாகனத்தின் உட்பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் அல்லது பணம் ஏதும் சிக்காத நிலையில், அவர் தொடர்ந்து தனது பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ளப் பறக்கும் படையினர் அனுமதி அளித்தனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முக்கியத் தலைவர்களின் வாகனங்கள் சோதனையிடப்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




