“கோயில் நிதியை அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா?” – திமுக அரசுக்கு எதிராக இபிஎஸ் கடும் தாக்கு!
தூத்துக்குடியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.162 கோடி நிதியை, அரசின் இதர திட்டங்களுக்குத் தமிழக அரசு பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். “கோயில் வளர்ச்சிக்காகப் பக்தர்கள் வழங்கும் காணிக்கை நிதியை, மற்ற திட்டங்களுக்கு எப்படிச் செலவு செய்யலாம்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், கொரோனா பேரிடர் காலத்திலும் வருமானக் குறைபாடுகளுக்கு மத்தியிலும் அதிமுக அரசு சிறப்பாகப் பணியாற்றியதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய திமுக அரசு ‘கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்’ என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாகச் சாடினார். தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளதே தவிர புதிய திட்டங்கள் எதுவும் வரவில்லை எனக் குறிப்பிட்ட அவர், “தமிழகத்தைக் கொள்ளையடிக்கும் இந்த திமுக ஆட்சி தொடர வேண்டுமா?” என மக்களிடையே கேள்வி எழுப்பினார். இபிஎஸ்-ஸின் இந்த அடுக்கடுக்கான புகார்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.




