தேர்தல் விதிமீறல்: திண்டுக்கல்லில் அனுமதியின்றி இணையதள பிரபலங்களுக்கு விருது வழங்கும் விழா – சாலை மறியலால் பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி இணையதள பிரபலங்களுக்கு விருது வழங்கும் விழா நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதள பிரபலங்களை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட இந்த விழாவில், பங்கேற்பாளர்களுக்குச் சிறப்பு விருந்து மற்றும் பணப்பலன்கள் வழங்கப்படும் என விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி எவ்வித வசதிகளும் செய்து தராததால் ஆத்திரமடைந்த இணையதள பிரபலங்கள், ஏற்பாட்டாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் குதித்தனர்.
இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் உரிய அனுமதி பெறாமல் இந்த விழாவை நடத்தியது தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






