வீரபாண்டி திமுகவில் வேட்பாளர் விவகாரத்தால் வெடித்த மோதல்: மாவட்ட செயலாளர் இல்லத்தை முற்றுகையிட்ட நிர்வாகிகள்!
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் தருண் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போர்க்கொடியில் தூக்கியுள்ளனர்.
இத்தொகுதியில் போட்டியிட வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர், ஒன்றியச் செயலாளர் வெண்ணிலா சேகர் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், கடந்த முறை தோல்வியடைந்த டாக்டர் தருணுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதால் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதன் எதிரொலியாக, வீரபாண்டி ஒன்றியச் செயலாளர் வெண்ணிலா சேகர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்டத் துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைச் செயலாளர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களுடன் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிவலிங்கத்தின் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






