தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவுக்கு சீட் மறுப்பு: எம்.பி டி.ஆர்.பாலு இல்லத்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள்!
திமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் தாம்பரம் தொகுதி தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் தொகுதியில் மீண்டும் எஸ்.ஆர்.ராஜாவே வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைமை இம்முறை மருத்துவர் கிருத்திகா தேவியை வேட்பாளராக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் அதிருப்தி அடைந்த எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், இரும்புலியூரில் உள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் இல்லத்தை அதிரடியாக முற்றுகையிட்டனர். திரளான அளவில் திரண்ட தொண்டர்கள், தங்கள் தலைவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கோரி ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது முறையல்ல என்றும், தொகுதி மக்களிடையே செல்வாக்கு மிக்க எஸ்.ஆர்.ராஜாவுக்கே மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதேபோல் திமுகவின் சில முக்கிய நிர்வாகிகளுக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்படாததால், கட்சித் தலைமை மீது அவர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த முற்றுகைப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அரசியல் சூழல் தகித்து வருகிறது.








