“எனக்கு சீட் கிடைக்காததற்கு அமைச்சர் கே.என்.நேருவே காரணம்” – லால்குடி எம்.எல்.ஏ. செளந்தரபாண்டியன் அதிரடி குற்றச்சாட்டு!
திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினரான செளந்தரபாண்டியன், வரவிருக்கும் தேர்தலில் தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு அமைச்சர் கே.என்.நேருவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லால்குடி தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வரும் செளந்தரபாண்டியன், இந்த முறையும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், திமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாதது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் நான்கு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதே அமைச்சர் நேருவுக்குப் பொறாமையையும் காழ்ப்புணர்ச்சியையும் உண்டாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், தனது அரசியல் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் அமைச்சர் நேரு தன் மீது திட்டமிட்டுத் தலைமைக்குத் தவறான புகார்களை அனுப்பி வந்ததாகவும், அதன் விளைவாகவே தற்போது தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டார். ஒரு மூத்த சட்டமன்ற உறுப்பினரே தன் கட்சி அமைச்சருக்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.







