நாளை சென்னை தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் அதிரடிப் பிரசாரம்: தேர்தல் ஆணையம் அனுமதி!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை சென்னை கொளத்தூர், பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். முன்னதாக, பெரம்பூர் தொகுதியில் பிரசாரம் செய்ய தவெக திட்டமிட்டிருந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் இட நெருக்கடி காரணங்களால் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்திருந்தது. இதனால் பிரசாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, கட்சித் தலைவர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து உரிய அனுமதி கோரி மனு அளித்தார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, பெரம்பூரில் மாற்று இடத்திலும், முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, நாளை பெரம்பூரில் இருந்து தனது பிரசாரப் பயணத்தைத் தொடங்கும் விஜய், அடுத்தடுத்து முக்கியத் தொகுதிகளில் வாக்காளர்களைச் சந்திக்க உள்ளார். இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.









