சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டி: வரும் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்!
சென்னை:
தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் வரும் 30-ம் தேதி (நாளை மறுநாள்) அதிகாரப்பூர்வமாக வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். தனது அரசியல் பயணத்தின் முதல் தேர்தல் களமாக பெரம்பூர் தொகுதியைத் தேர்வு செய்துள்ள விஜய், வேட்புமனு தாக்கல் செய்த உடனேயே அதே நாளில் தனது தேர்தல் பரப்புரையையும் அந்தத் தொகுதியில் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.
விஜய்யைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் மற்ற 233 வேட்பாளர்களும் அதே 30-ம் தேதியன்று அந்தந்த தொகுதிகளில் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரே நாளில் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் மனுத்தாக்கல் செய்வது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர் தொகுதியில் விஜய் நேரடியாகக் களம் இறங்குவதால், அந்தத் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளதுடன், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.







