ராணிப்பேட்டை: தேர்தல் விதிகளை மீறி பேருந்து நிலைய நுழைவாயிலில் திமுகவினர் பேனர் – நகராட்சி நிர்வாகம் அதிரடி அகற்றம்!
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி திமுகவினர் விளம்பர பேனர்களை ஒட்டியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில், விதிகளுக்குப் புறம்பாகப் பேருந்து நிலையக் கட்டடத்தின் மீது விளம்பரப் பேனர்கள் ஒட்டப்பட்டது சர்ச்சையை உருவாக்கியது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலானதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து உடனடியாகச் செயல்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர், தேர்தல் விதிமீறலாக ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேனர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியினரின் இந்த விதிமீறல் நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







