காஞ்சிபுரம்: மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் – தற்கொலை முயற்சியால் பரபரப்பு!
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே நீர்வல்லூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட 97 தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி தொழிற்சாலை முன்பு குடும்பத்துடன் திரண்டு அதிரடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2,000 ஊழியர்கள் பணியாற்றும் இந்த நிறுவனத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊக்கத்தொகை கோரி சிஐடியு (CITU) தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக, நிர்வாகம் 97 நிரந்தர ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும், நிர்வாகத் தரப்பில் உரிய தீர்வு கிடைக்காததால், ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் இன்று தொழிற்சாலை வாயில் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் உச்சகட்டமாக, நான்கு தொழிலாளர்கள் தொழிற்சாலையின் மேற்கூரை மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மேற்கூரையில் ஏறியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








