மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!
மேட்டுப்பாளையம்:
கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் சேவையை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதன்படி, மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு காலை 9:10 மணிக்குச் சிறப்பு ரயில் தனது பயணத்தைத் தொடங்கியது. இதில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் எழில்மிகு இயற்கை காட்சிகளை ரசித்தபடி உற்சாகமாகப் பயணம் செய்தனர்.
இந்தச் சிறப்பு ரயில் சேவை வரும் ஜூலை 5-ம் தேதி வரை வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மறுமார்க்கமாக ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மார்ச் 28 முதல் ஜூலை 6-ம் தேதி வரை சனி மற்றும் திங்கட்கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கோடை விடுமுறைக்காக நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த கூடுதல் ரயில் வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







