மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!
மதுரை மாவட்டம் கீழ நெடுங்குளம் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால், பல கோடி ரூபாய் மதிப்பிலான நெல்மணிகள் மழையிலும் வெயிலிலும் சிக்கிச் சேதமடைந்து வருவது விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியில் கண்மாய் பாசனத்தை நம்பி சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தீவிரமாக நெல் சாகுபடி செய்திருந்தனர்.
தற்போது அறுவடைப் பணிகள் முடிவடைந்த நிலையில், விற்பனைக்காக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் முனியாண்டி கோவில் களத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஒரு மாத காலமாக அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், திறந்தவெளியில் உள்ள நெல்மணிகள் அவ்வப்போது பெய்யும் மழையில் நனைந்தும், கடும் வெயிலில் காய்ந்தும் தரம் குறைந்து வருகின்றன.
நீண்ட நாட்களாகக் காத்திருப்பதால், தற்போது ஈரப்பதம் காரணமாக நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அரும்பாடுபட்டு விளைவித்த பயிர் கண் முன்னே வீணாவதைத் தடுக்க, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு நெல் கொள்முதல் நிலையத்தைச் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






